Wednesday, September 21, 2011

உன்னை இழந்ததற்கு பதிலாய்....

நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது...

Friday, July 22, 2011

ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize

ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் சேமிப்பு பெட்டகமாக சுமார் ஏழு ஜிபி வரை (7557 MB) இலவசமாக வழங்குகிறது. ஜிமெயில் பயன்படுத்தாத இண்டர்நெட் பயனாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஜிமெயில் நிறுவனத்தின் ஈமெயில் சேவையை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறனர். நாம் தினமும் பல ஈமெயில்களை அனுப்பவும், ஈமெயில்களை பெறவும் செய்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஜிமெயில் நிறுவனம் வழங்கிய முழு சேமிப்பு இடமும் சேமிக்கப்படும் போது, புதியதாக நினைவகத்தை விலை கொடுத்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய ஈமெயில்களை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஈமெயிலகளை பேக்அப் செய்து மீண்டும் வேறொரு ஜிமெயிலில் அப்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Account > New என்பதை தேர்வு செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Sever என்ற இடத்தில் imap.gmail.com என்பதை உள்ளிட்டு ஒகே செய்யவும்.

இப்போது உங்களுடைய கணக்கானது பரிசோதிக்கப்படும். பின் Account-> Account Backup எனபதை தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய ஈமெயில் அக்கவுண்ட் பட்டியலிடப்படும். அதில் உள்ள லேபிள்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பேக்அப் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Back up பொத்தானை அழுத்தி பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சமே ஒரு ஜிமெயில் அக்கவுண்டில் பேக்அப் செய்து கொண்டு மற்றொரு அக்கவுண்டில் அப்லோட் செய்து கொள்ள முடியும். ஜிமெயில் நிறுவனம் ஆரம்பித்த போது பயனர் கணக்கு தொடங்கிய பலருக்கும் தற்போது முழு சேமிப்பு இடமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கிய வருடம் 2004 ஆகும். இண்டர்நெட் இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம் ஆகும். இல்லையெனில் வேலை தாமதப்படும். ஒரு முறை முயன்றுதான் பாருங்களே.

Wednesday, July 13, 2011

இந்தியாவின் புதிய சூப்பர் கம்ப்யூட்டர்

உலகில் அதிவேகமான கணினிகளை உருவாக்குவதில் உலகில் முன்னணி நாடுகள் போட்டிப்போட்டு செய்துவருகின்றன. அதில் நம் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிலிருந்து இதுவரை 6 அதிவேக சூப்பர் கணினிகள் இயங்கிவரும் நிலையில் தமிழகத்திற்கு மகுடம் வைத்தார்ப்போன்று சென்னையில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் மேத்மெடிக்கல் சயின்ஸ் வளாக பிரிலியண்ட் வல்லுநர்கள் நாட்டின் ஏழாவது அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கணினியான அன்னபூர்ணாவை வடிவமைத்துள்ளனர். .

1.5 டெரா பைட் மெமரி, 30 டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்ட இந்த அதிவேக சூப்பர் கணினி, இயற்பியல்,லாட்டிஸ் தியரி, கம்யூட்டனல் பையலாஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அன்னப்பூர்ணா ரூ.6 கோடி செலவில் நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி அன்னபூர்ணாவின் செயல்திறன் எப்படி என்று பார்ப்போமா?

1). 1024 கோர் - இண்டெல் நேகலெம் 2.93GHz சிப்ஸ்
(நமது கணினிகளில் நாம் பயன்படுத்துவது 1 கோர்(core) மட்டுமே நமது கணினிகளை விட 1024 மடங்கு வலிமையுடையது இந்த கணினி.)

2).1.5 டெரா பைட் மெமரி
நாம் இப்போது பயன்படுத்துவது 1 GB RAM . 1.5 TB=1500 GB RAM)

3)30 டெரா பைட் ஸ்டோர்ஜ் = 30 TB (1024 gb= 1 TB)

12 டெராபிளாப் வேகம் கொண்ட அன்னபூர்ணா நம் நாட்டின் மூன்றாவது மிக அதிக செயல்திறன் கொண்ட கணினியாக கருதப்படுகிறது.

இதே போன்று பெங்களூரில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் ஒரு கணினியையும்,டாடா இன்ஸ்டியூட் ஒரு கணினியையும் முன்பு வடிவமைத்து உள்ளன.

அன்னபூர்ணா இண்டியன் இன்ஸ்டியூட்டின் நான்காவது அதிக செயல்திறன் கொண்ட கணினியாகும்.

ஏற்கனவே கப்ரு,விந்தியா,ஆரவள்ளி ஆகிய முதல் மூன்று கணினிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் 15 இன்ஸ்டியூட்களை இணைக்கும் பணியை செய்யும் கருடா கிரிட் நிறுவனத்திற்காக கப்ரு சூப்பர் கணினி செய்கிறது.


ஆனால் என்ன ஒரு விசயம்...

மின்சாரத்தை நிறைய சாப்பிடும் :)

சுட்டிக்கம்ப்யூட்டரை உருவாக்கிய நம்மூர் ஆட்களுக்கு வாழ்த்துக்கள்

Thursday, June 23, 2011

இன்றைய காதல் சுழல்

முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி-ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

Saturday, June 18, 2011

சொல்லாமல் விட்ட காதல்

திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்

போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு

தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்

மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்

சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை

மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு

Friday, June 10, 2011

டீன்-ஏஜ் ஜாக்கிரதை...

தொழில்நுட்பம் என்கிறது நம்மளோட அறிவ வளத்துக்குறதுக்கும் தகவல்கள தெரிஞ்சுக்குறதுக்கும் உபயோகமா இருக்குற சாதனம் தான். ஆனா இன்னைக்குள்ள வாழ்க்கை முறைல இளைஞர்களோட வாழ்க்கைப் பாதையை வெகுவா மாத்துறது இந்த தொழில்நுட்பங்கள் தான்னு சொல்லலாம். முக்கியமான உதாரணமா இணையத்த சொல்லலாம். இளைஞர்கள்னு கூட சொல்ல முடியாது. சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க.

தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும்செய்றானுங்க.

என் பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு பத்தாவது படிக்கிற ஒரு பையன் இருக்கான். அவங்களுக்குப் படிப்பறிவு கம்மி, ஆனாலும் நல்ல வசதியானவங்க. அவன் ஒரே பையன்குறதுனால அவன் கேட்டான்னு கம்ப்யூட்டர், செல்போனெல்லாம் வாங்கி குடுத்துருக்காங்க. அந்தப் பையன எனக்குச் சின்ன வயசுலருந்தே தெரியும்குறதுனால என்கிட்ட நல்லா பேசுவான்.

பாக்குறதுக்கு ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா கம்ப்யூட்டர்ல உக்காந்துட்டான்னா எப்ப பாத்தாலும் ஆர்குட், ஃபேஸ்புக், ச்சாட்டிங்னு தான் அவனோட பொழுது கழியும். ஆரம்பத்துல நா கூட இவன ரொம்ப நல்ல்ல்வன்னு நெனச்சேன். ஆனா என்னோட தோழி ஒருத்திகிட்டயே தப்பான பேர்ல இவனோட ச்சாட்டிங் வேலைய காமிச்சு என்கிட்ட மாட்டிகிட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது, இவன் படிக்காம கண்ட கண்ட இணைதளமெல்லாம் நைட்ல பாக்குறன்னு. அது மட்டுமில்லாம ரெண்டு பொண்ணுங்ககிட்ட ச்சாட்டிங்கல லவ் டயலாக் விட்டுகிட்டு இருக்கான்னு தெரியவந்துச்சு. கூப்ட்டு கண்டிச்சேன். இவனுங்களுக்குத்தான் அட்வைஸ் பண்றவங்களப் பிடிக்காதே. என்கிட்ட பேசுறத நிறுத்திட்டான். அவங்க அம்மா கிட்ட சொன்னதுக்கு “அவன் சின்னப்புள்ளமா, அந்தளவுக்கெல்லாம் விவரம் இல்லாதவன், நீ வீணா எதையாவது சொல்லாத“னு என்கிட்ட கோவப்பட்டாங்க.

அவனுக்கு மிஞ்சிப்போனா பதினஞ்சு வயசு தான் இருக்கும். அவன கண்டிச்சாலும் அட்வைஸ் பண்ணினாலும் எடுத்துக்கொள்ளாத பருவம் இது. ஆனாலும் அவன தனியா கூப்ட்டு “சகோதரனா நெனச்சு உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம்“னு சொன்னேன். அவன் வழக்கமான ஏளனச் சிரிப்போட “ஆரம்பிச்சுட்டீங்களா“ங்குற மாதிரி பாத்தான்.

“இந்த வயசுல உனக்கு எல்லாமே சகஜமா தெரியலாம், இதுலென்ன தப்பிருக்கு?னு தான் தோணும். ஆனா ஒண்ணு மட்டும் மனசுல வச்சிக்க. சில வருஷத்துக்கப்புறம் ஒரு மெச்சூரிட்டி வரும்போது உன்னப்பத்தி நீ நெனச்சுப் பாக்குற நேரத்துல, பெருமையா நெனைக்கலனாலும் “நாமளா இவ்ளோ கேவலமா நடந்துகிட்டோம்“னு தோணிடக் கூடாது. அடுத்தவன் முன்னாடி நீ நல்லவன் மாதிரி நடிச்சிட்டுப் போயிடலாம். ஆனா உனக்கு நீ உண்மையா இரு. அந்தந்த வயசுல உனக்கு கெடைக்க வேண்டியதெல்லாமே கட்டாயம் கெடைக்கும். இப்போ உனக்குப் படிப்பு தான் முக்கியம். உங்கம்மா உன் மேல வச்சிருக்குற நம்பிக்கைய கெடுத்துக்காத. இதுனால உனக்கு என் மேல வெறுப்பு கூட வரும். ஆனா சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்“னு நேருக்கு நேரா அவனோட கண்ணப் பாத்து சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இப்பவும் அவன் ச்சாட் பண்ணிகிட்டு, போன் பேசிகிட்டு தான் இருக்கான். பெத்தவங்க குடுக்குற செல்லம் தான் இந்த மாதிரியான பசங்கள ரொம்பவே கெடுக்குது. அதுக்காக எந்நேரமும் சந்தேகக் கண்ணோடு பாக்கணும்னு சொல்லல. ஆனாலும் கொஞ்சம் கவனமாவும் இருக்கணும். ஆண் பெண் நட்பு சகஜமாகிட்டு வரும் காலமிது. ஆனாலும் அது நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் பட்சத்தில் தவறாகப் போகாது. டீன்-ஏஜ் வயசுல இனக்கவர்ச்சி ஏற்பட்றது தவிர்க்க முடியாத விசயம் தான். அந்த அபாயத்துல இருந்து தங்கள வெளில கொண்டுவர்றது தான் இவங்களுக்குப் பெரும்பாடு. தலைமுறை இடைவெளி, நட்பு வட்டாரம், காதல், காமம், கெட்ட பழக்க வழக்கங்கள், படிப்பு, திமிர்.. இப்டி எல்லாமே ஒருசேர கலந்து குழப்புற வயசு தான் இந்த டீன்-ஏஜ் பருவம். இது பெத்தவங்களையே விரோதியா பாக்க வைக்கும். தங்களோட வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது இந்த வயது தான்ங்குறத இவங்க புரிஞ்சுக்குறதில்ல. இந்த வயசுல இவங்க எடுக்குற முடிவுகளோட பாதிப்பு, வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் ப்ரதிபலிக்கும்.சாதாரண விஷயம் தானே... சகஜமா நடக்குற சம்பவம் தானேனு தோணலாம். ஆனா சின்னச் சின்ன தவறுகள் தான் பெரிய பாதிப்புக்கு காரணமா அமையும். எதையும் தெரிஞ்சுக்கணும்குற ஆர்வம் தான் இவங்கள தவறு செய்ய தூண்டுது.

“நீ தப்பு பண்ணிகிட்டு இருக்க. ஆனா அது தப்புனு உனக்குப் புரியுற நேரத்துல, அதுக்காக மன்னிப்பு கேக்குற சந்தர்ப்பம் உனக்குக் கெடைக்காமலே போகலாம்“னு ஒரு வசனம் உண்டு. இது தான் இன்னைக்கு இவங்களோட நிலைமையும். பெத்தவங்க இவங்ககிட்ட தோழமையோட பழகும்போதும், வெளிப்படையா எண்ணங்கள பகிர்ந்துக்கும்போதும் இந்த மாதிரியான தப்புக்கள் குறைய வாய்ப்பிருக்கு. திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.

Wednesday, May 18, 2011

உறவுகள் மேம்பட....

குடும்பத்திலும்சரி அலுவலகத்திலும் சரிமனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.

சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.

நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.

மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.

Saturday, April 30, 2011

காதலென்பது


காதல்
கனவுகளின்
வேடந்தாங்கல்
கற்பனைகளின்
சரணாலயம்.

காதல்
ஆழம் தெரியாமல்
காலைவிட்டால்,
உள்ளிழுத்து
உயிரை உறிஞ்சிவிட்டு
உடலை மட்டும்
வெளியேற்றிவிடும்
கடல்

காதல்
நினைவுகளை
நிஜமென்றெ நம்பி
நித்திரையை
தொலைத்துவிடும்
கனவு

காதல்
கல்விகற்க
செல்லும்போது
கலவிகற்க
கற்றுக்கொடுக்கும்
பாடம்

காதல்
எறியுமென்று தெரிந்தும்
நெஞ்சுக்குள்
கொழுத்திக்கொள்ளும்
நெருப்பு.

காதல்
மட்டும்தான் வாழ்க்கையென
நினைத்து வசந்தத்தை
தொலைத்து நிற்கும்
இலையுதிற்காலம்.

காதல்
என்ற சொல்லை நம்பி
கன்னியர் மட்டுமல்ல
காளைகளும் கதிகலங்கித்தவிக்கும்
கலிகாலம்.

காதல்
ஆள்களைத்தொட்டால்
கேளிக்கை
அதுவே!!
ஆன்மாவைத்தொட்டால்
வாழ்க்கை...

Friday, April 22, 2011

கோபம் தன்னையே அழித்து விடும்

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு,
ஆத்திரம் அழிவைத் தரும்"
என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்..

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது... இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்.

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

அவற்றுள்...

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள். நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

Monday, April 18, 2011

நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான்...

"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்"
என்று சொல்வார்கள் இவை முற்றிலும் உண்மை. குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது...

ஏசுநாதர், இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர் அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை... ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும். தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை...

கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை... உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ நியாபடுத்தபடும்... ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான். இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான்... அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி' அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே... ஆனால் இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்...

பெண்களின் பெருமையை பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள் செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்... வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்...

சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும் ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள். ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் எப்படி வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யல்தான்...

ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கள்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது.

Tuesday, April 5, 2011

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை


குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

* கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


* குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

* தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்" போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

* சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

* குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.


* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

* குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

* உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

* படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

* குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Friday, April 1, 2011

பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.

1. பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2. தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3. கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4. பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, சன்னமாக அலட்ட பிடிக்கும்.

5. தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும்.யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.

6. ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7. உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

8. அழுகை, பூ, பூஜை, பணம், சீரியல், நகை, ஆடை அலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம் (?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.

Thursday, March 31, 2011

வருகிறது பேஸ்புக் இமெயில் சேவை

பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.

இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் ( Facebook Messages ) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் மெசேஜ், எஸ்.எம்.எஸ். மற்றும் சேட் எனப்படும் அரட்டை வசதி ஆகிய அனைத்தும் கொண்டதாக அமையும். இவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில், தகவல்களையும் கோப்புகளையும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் பயனாளர் பெயர் இணைந்த @Facebook.com என்ற இமெயில் முகவரி தரப்படும். இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் மட்டுமின்றி வேறு எந்த இமெயில் நெட்வொர்க் அக்கவுண்ட்டிற்கும், மெயில் அனுப்பிப் பெறலாம். விரைவில் ஐ-போனிலும் இது அமல்படுத்தப்படும் என்றும், அதற்கென 15 தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இமெயில் பிரிவில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும்.

1. இமெயில் மூலம் பேஸ்புக் மற்றும் வெளி நெட்வொர்க்குகளில் உள்ளோருடன் தொடர்பு மற்றும் தகவல், கோப்புகள் பரிமாற்றம்.

2. இருவருக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளும், ஒரே உரையாடலாக அமைக்கப்படும். இவை வெவ்வேறு தலைப்பில் இருந்தாலும், ஒரே உரையாடலாகவே கிடைக்கும்.

3. மற்ற இமெயில் தளங்களில் இல்லாத ஒரு வசதி இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் இமெயில்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை அனைத்தும் தனியே முன்னுரிமை தொகுப்பாக வைக்கப்படும். இவற்றிற்கு சிறப்பு போல்டர்கள் தரப்படும். அதே போல முக்கியமானவர்கள் என நீங்கள் கருதும் ஒருவரின் மெயில்களும் பாதுகாக்கப்பட்டு தனியே போல்டரில் கிடைக்கும்.

பேஸ்புக் மெயில் வசதி, வரும் சில மாதங்களில் இன்விடேஷன் மூலம் தரப்படும். தற்போது நீங்கள் உங்களுக்கான இமெயில் முகவரியினை, முன்கூட்டியே பதிவு செய்து வைத்திட வசதி தரப்பட்டுள்ளது. பேஸ்புக் மெசேஜ் பக்கத்தில் இதற்கான அறிவிப்பினைக் காணலாம்.

இந்த வசதி, பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை நோக்கி எறியும் புதிய அம்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஒரே இரவில், அனைத்து ஜிமெயில் பயன்படுத்துபவர்களும், அதனை விட்டுவிட்டு பேஸ்புக் இமெயிலுக்கு மாறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பின், இமெயில் சேவை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என அனைவரும் குறிப்பிடும் வகையில், எங்கள் சேவை இருக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கூகுள் தன் தேடும் வசதிகளுடன் தரும் பிற வசதிகள் அனைத்தையும், பேஸ்புக் தர முயற்சிக்கிறது. போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது, உடனடி மெசேஜ் விண்டோ, ஸ்கைப் உடன் இணைந்து வீடியோ அழைப்பு அமைத்தல் ஆகியவையும் கிடைக்கின்றன. இப்படி இலவச சேவைகளை இந்த முன்னணி நிறுவனங்கள் தருவது நமக்கு நல்லதுதானே. நம்ம காட்ல மழைதான் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

Monday, March 28, 2011

நினைவுப் புதையலில் மட்டும்...

நாட்கள் நகர்கின்றன
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!

நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை

எல்லாமே மாறுகின்றன
என்னைச் சுற்றி...
என் மனமோ உன்னைச் சுற்றி..
அழுத்தமாய் பற்றி...!

திருவிழாக் கூட்டத்தில்
தனித்துவிடப்பட்ட தலைமகன் நான்!
தொலைத்தவள் நீ...

தேம்பியழ வழியில்லை...
அழுது புலம்ப வகையுமில்லை!


முகம் முழுவதும் புன்னகை; ஆனால்
விரக்தியின் லேசான தீற்றலில் கண்கள்!

உள்ளங்கையில் திட ரேகைகள்; ஆனால்
உள்ளமெங்கிலும் கவலை ரேகைகள்!

நடையினில் கம்பீரம் குலையவில்லை; ஆனாலும்
நடுக்கத்தின் நாற்றாங்கால் செழிப்பாய் இருக்கிறது!

வெளிச்சமாய் வண்ணமயமாய் இருக்கிறது உலகம்!
இருளாய் மாயைகள் நிறைந்ததாய் இருக்கிறது என் மனவுலகம்!

பிரியுமா பிரியம்....!

என் ஞாபகங்கள்
எப்போதாவது வந்தால்
உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும்
உனக்கு ஞாபகம் வரட்டும்...

உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும்
பார்க்க வைத்து
குருடாக்கினாய்
என் கண்களை...

எனை சந்திக்காமல்
இருக்கத்தான்
இடம் பெயர்ந்தாய்
என்று சொல்லி இருந்தால்
நான் உனக்காய்
என் உயிரை
சாகடித்திருப்பேனே…

என் கவிதைகளை
பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை
பிடிக்கவில்லை
அதனால்த்தானோ
என்னை விட்டு
பிரிகிறது உன்னை
போல் என்
கவிதைகளும்...

காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான்
கண் இல்லை
ஆமாம் நான்
பாக்கக் கூடியதாய்
நீ பாக்காமல்
பிரிந்து போனாயே..
.

Saturday, March 5, 2011

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.

ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:

* நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும். அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.

* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம்.

* மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும்.

* குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும்.

* மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும்.

இவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

Friday, February 25, 2011

நொடிகளும் நிமிடங்களும்

நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்......

ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன...
உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்க விரும்புகின்றேன்...

முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்....

நீ
என்னை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது...

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசான நகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது?

சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது....

உன்னை அழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்...

சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது...
எனது மனசாட்சி...

மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்....

நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை...

உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்...
முடியும் என்று,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது...

நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....

அரை மணி நேரம்
என் வாயில் அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்....

கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்...

Monday, February 14, 2011

நீயில்லாத வாழ்க்கையா?

கடலலைகள் நம் பெயரை
அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும். இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்
இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை
உச்சரிக்கும்

நித்தமும் புதிதாய் மலர்ந்ததை
கண்டு
கோபம் கொண்ட பொறாமை
மலர்களும்
என்னை கேலி செய்யும். இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்

வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்

உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத
விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?

காதலி
வெற்று மனதில் காதலை
நிறைத்து - இன்று
வெறுமையாக்கி விட்டது
நீயடி
கண்ணீர் துடைபவளே - என்
கண்ணீருக்கு காரணமானதும்
ஏனடி?

மழை நீருடனும்
கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்

பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்

காகிதத்தில் வடித்ததை
எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில்
செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்

காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த
சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்

எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்
உன் இடத்தை நிரப்ப ஆளில்லை

நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன
உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும்
மெல்ல மெல்ல மறைகிறது...

Saturday, January 8, 2011

லேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு

தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை ஷட்டௌன் செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா? Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

விண்டோஸ் Taskbar - System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

இதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.