Tuesday, August 27, 2013

நீங்கள் எந்த வகை?

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.

காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!

நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்

சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

Saturday, August 24, 2013

மனைவி சரியா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க என்ற கவலையா?

Why Women Misunderstand Men

இல்லறத்தில் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் சில நேரங்களில் தம்பதியல் இடையே புரிதலில் எழும் பிரச்சினைகளினால் உறவுச்சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் ஒரு சில சமயங்களில் ஆண்களை தவறாக புரிந்து கொள்வதே இதற்குக் காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் எந்த விசயத்தில் பெண்களின் புரிதல் தவறாகிறது தெரிந்து கொள்ளுங்களேன்.

தம்பதியர் வேற்றுமை

தம்பதியரிடையே குணாதிசயங்களில் மாற்றம் உண்டு. ஆண் என்பவன் செவ்வாய் கிரகத்தைப் போன்றவன். இது செந்நிறமானது. அதிக வெப்பம் நிறைந்தது. பெண் என்பவர் வீனஸ் கிரகத்தைப் போன்ற குணமுடையவள். இது குளிர்ச்சி பொருந்தியது. இருவருக்குமிடையே புரிந்து கொள்ளும் தன்மையில் தவறுகள் எழ வாய்ப்பு உள்ளது.

உணர்வுகளை வெளிப்படுத்துவது

பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்கள் எப்போதுமே தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்ற எண்ணம் உடையவர்கள். இது ஒரு ஆண் வளர்ந்த விதத்தைக் குறிக்கிறது. தன்னுடைய எண்ணத்தை சரியாக வெளிப்படுத்தவும் தெரிவதில்லை. இதுவே பெரும்பாலான பெண்கள் ஆண்களை தவறாக புரிந்து கொள்ள நேரிடுகிறது.

எதிர்பார்ப்புகள் அதிகம்

எப்பொழுது எதிர்பார்ப்புகள் அதிகமாகிறதோ? அப்பொழுது உணர்வுபூர்மான எண்ணங்கள் ரத்தம் வழியாக மூளையில் நிரம்பியிருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் தவறாகும் பட்சத்தில் உறவுச் சிக்கல் ஏற்படும்.

தெளிவா பேசுங்க

பெண்கள் பொதுவாக அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே ஒரு பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விரும்புவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்துப் பேசுவது பெண்களின் வாடிக்கை. எதையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆவலும் பெண்களுக்கு உண்டு. அதேபோல் தனது கணவரும் தன்னுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நீங்கள் ரிசர்வ்ட் டைப் ஆக இருக்கும் பட்சத்தில் வெட்கப்பட்டுக் கொண்டு எதையும் பேசாமல் இருக்கும் பட்சத்தில் பெண்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அமைதியாக இருக்க வேண்டாம். மனைவியுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துங்கள். அப்புறம் இல்லறத்தில் எந்த சிக்கலும் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பிரச்சினைக்கு தீர்வு

பெண்கள், அதிக விவரங்களை கேட்டுக் கொண்டிருப்பது அனாவசியமானதல்ல, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவே என்பதை கணவர் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

பெண்கள் அதிகமான விஷயங்களை துளைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வது உறவுகளை நிலைநிறுத்த தேவையானது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆண்-பெண் புரிதல் எளிதாகி விட்டால் அங்கே பிரச்சினைகளுக்கான பாதை அடைபட்டு விடும்.

Thursday, August 22, 2013

சென்னை பெயர் வந்தது எப்படி?

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்:

சென்னை:
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ்:
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம்:
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம்:
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம்:
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்:
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :
சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு:
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர்:
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி:
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி:
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல்:
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர்: மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் :
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

Tuesday, August 20, 2013

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா... இதைப்படியுங்கள்...!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.

குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

Saturday, August 17, 2013

மன அமைதியான வாழ்வுக்கு

நாம் வெற்றி அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதே போல் தோல்வி அடைவதற்கும் பல காரணங்கள் கூறலாம். அவைகளில் முக்கியமான காரணம் நமக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல் ஆகும். இந்த மன உளைச்சல் காரணமாக இன்று பலர் தமது வெற்றியை இழந்திருப்பதை நாம் நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.

இந்த 20ஆம் நூற்றாண்டை மன உளைச்சல் ஆண்டு என்று கூறுகிறார்கள். இன்றைய மனிதர்கள் எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு, வெறுப்பு இவைகளை அடைவதால் அவர்களுடைய சக்திகள் அனைத்தையும் இழந்து வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்து விடுவதுபோல வெற்றிக் கனியை நழுவ விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.

டென்ஷனின் உடன் விளைவான கோபம், நம்முடைய இயல்பும் அல்ல, இயற்கையான குணமும் அல்ல. நாம் ஏன் டென்ஷன் (மன உளைச்சல்) அடையக்கூடாது என்று தெரியுமா? இந்த டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழித்து விடுகிறது. டென்சன், கவலை, பயம் போன்ற உணர்வுகள் மனதில் தோன்றினாலும் அதன் பாதிப்புகள் உடலில் தான் ஏற்படுகின்றன.

நம்முடைய மனதிற்கும், உடலுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டென்ஷன், பயம் போன்றவை மனதில் ஏற்பட்டாலும் அதன் பாதிப்புகள் உடனடியாக நம்முடைய உடலில் தான் தெரிகின்றன.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுகிறார்களே அதைப் போல் தான் இதுவும். அடிக்கடி டென்ஷன் அடைவதால் நமக்கு தலைவலி, இதயத் துடிப்பு அதிகமாகுதல், அல்சர், வயிற்றுப் போக்கு, இரத்த அழுத்தத்தில் மாறுதல்கள், நடுக்கம், வாய் உலர்ந்து போதல், நீரிழிவு நோய் போன்ற உடல் ரீதியான நோய்களும் ஏற்படுகின்றன.

இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது யாருக்கும் எந்த நோய் வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. டென்ஷன் ஏற்படும்பொழுது மனமானது தனது சமநிலையை இழந்து விடுகிறது.

இதனால் சிடுசிடுப்பு, எரிச்சல், ஒருமுகப் படுத்தும் சக்தி குறைவு, ஞாபக மறதி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. இது போன்ற மன நிலை ஏற்பட்டால் எப்படி ஒரு மனிதன் தனது காரியத்தை திறம்படச் செய்ய முடியும்? பொதுவாக கோபம் வரும்பொழுது என்ன செய்கிறீர்கள்? சிலர் அதை வெளியே காட்டி விடுகிறார்கள்.

சிலர் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்கிறார்கள். இதில் எது நல்லது? அடக்கிக் கொள்வதா? அல்லது வெளியில் காட்டிவிடுவதா? அடக்கிக் கொள்வதால் கேன்சர் போன்ற நோய்களும், வெளியில் காட்டிவிடுவதால், உறவின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டு விடுகின்றன. அதற்காக கோபத்தை அடக்கிக் கொள்ளவும் கூடாது.

அதை வெளிக்காட்டுதலும் கூடாது அதை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கோப உணர்வில் அன்பு மற்றும் இனிமையின் குணங்களைப் பதிக்க வேண்டும். எனவே நம்முடைய டென்ஷனுக்குக் காரணம் மற்றவர்கள் தான் என்பதை விலக்கி, நாமும் காரணம் தான் என்று புரிந்து கொள்ளும் போதுதான் அதற்கான நிவாரணத்தை கண்டு அறிய முடியும்.

Monday, August 12, 2013

சுமூகமான திருமண வாழ்விற்கு வழிகள்

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும்.

அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது. வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக்குவதை தவிர்க்க வேண்டும்.

இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம். வரவுக்கேற்றபடி செலவு செய்ய இருவரும் முன்வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாதந்தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம். சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவிர்க்க வேண்டும்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும்.

முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாக பேசி முடிக்க வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக்கும் பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைப்பதும் தவறு.

இதனால் பிரச்சினைகள்தான் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மனநிலையும் முக்கியம்.

Thursday, August 8, 2013

கடவுளை சந்தித்தேன்...

(வாழ்க்கையை வெறுத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை:)

கதைக்குள் பயணிக்கும் முன்...
(முன்னெச்சரிக்கை)

இந்த கதை நான் எழுதும் கதையாக புதிதாக உங்களுக்கு அறிமுகமாகலாம், அல்லது நீங்கள் இந்த கதையை முன்பே சந்தித்திருக்கலாம்... எது எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஒருமுறை படித்து விடுங்கள். இது உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவும்... நான் ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதையின் தாக்கமே இக்கதை... இக்கதையின் மூலம் என்னுடையது அல்ல... மூலக்கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து எனது நடையில் சொல்லி இருக்கிறேன்...

எனக்கு வாழ்க்கையே பிடிக்க வில்லை, என்னுடன் யாருமே சரியா பேசமாட்டேன்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது, எனக்கு ராசியே இல்லை, நான் துவங்கும் காரியங்கள் வெற்றி அடைவதே கிடையாது... பேசாமல் செத்து போய் விடலாம்... என்று வார்த்தைகளை மனதிற்குள் கூறிய படியே, புலம்பல்களுடன் நடந்து கொண்டிருந்தேன்.

எப்படி சாகலாம் என்று யோசித்த எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கொண்டது எங்கள் வீட்டிற்கு அருகே இருந்த அந்த பெரிய மலை. மலையின் மீது ஏறி அங்கிருந்து குதித்து செத்து விடலாம் என்று என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நம்பிக்கையுடன் மலையின் மீது ஏற துவங்கினேன்....

அது உயரமான மலை, மலை மீது ஏறும் போது தான் என் மனம் இப்படி சிந்திக்க துவங்கியது. "சாவதற்கு எத்தனையோ எளிய வழிகள் இருக்கும் போது நான் ஏன் இதை தேர்வு செய்தேன்" (உங்கள் மனதில் "விண்ணை தாண்டி வருவாயா" சிம்பு பேசும் வசனம் நினைவுக்கு வரலாம்). என்று நினைத்து கொண்டேன். சாவிற்கு நான் எடுத்த முயற்சி கூட தோற்றுவிடுமோ என்கிற அச்சத்தில் "கடவுளே!" என்று அழுது புலம்பினேன்...

இடி சத்தம்..... பயங்கர வெளிச்சம்...... ஒரு சிறு நடுக்கம்..... நான் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். சில வினாடிகள் கடந்திருக்கும் புவி ஈர்ப்பின் வேகம் என்னை கீழே இழுத்த்து... நான் கீழே விழுந்து கொண்டிருந்தேன்... சாவை நெருங்கும் போது தான் சாவின் பயம் தெரிகிறது...

"நான் சாக விரும்ப வில்லை, வாழ வேண்டும்... எனக்கு பயமா இருக்கு கடவுளே என்னை காப்பாத்து..." கீழே விழுந்து விட்டேன்.

"மலையிலிருந்து கீழே விழுந்தும் நான் ஏன் சாகவில்லை?".

என் அருகே ஒரு நபர் நின்று கொண்டிருந்தார், ஆஜானபாகுவான உருவம், அழகான தோற்றம்,அவரிடம் நான் மெல்ல கேட்டேன்  "நீங்க யாரு?"
ஹா...ஹா... இது அந்த புது ஆசாமியின் சிரிப்பு...

சிரித்து முடித்து விட்டு பேச துவங்கினார்.... "நீ கீழே விழும் போது என்னை கூப்பிட்டாய் அதனால் தான் வந்தேன்..."
"நான் உங்களை கூப்பிட வில்லையே..." இது நான்

"கடவுளே என்னை காப்பாத்து என்று என்னை அழைத்தாய் அதனால் தான் உன்னை காப்பாற்றினேன்... நீ இன்னும் சாகாமல் இருக்க நான் தான் காரணம்."

ஹா...ஹா... இது என் சிரிப்பு..

மதங்கள் எனக்கு கற்பித்த கடவுளுக்கும் இவருக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்... மிக சாதரணமாக இருந்தார்... கையில் ஆயுதங்கள் இல்லை... என் மதத்தில் சேர்ந்து கொள் என்று என்னிடம் அவர் சொல்லவே இல்லை...

திரைப்பட பாணியில் "நீங்கள் கடவுள் தான் என்பதற்கு ஆதாரம் என்ன...? ஏதாவது மாயாஜாலங்கள் செய்து காட்டுங்கள்" என்று எனக்கு கேட்க தோன்றவில்லை..

அவர் கடவுள் தானா என்ற தர்க்க ஆராய்ச்சி செய்ய என் மனதில் சக்தி இல்லை. என்னை சாவிலிருந்து காப்பாற்றிய அவர் எனக்கு கடவுளாகாவே தெரிந்தார் என் சாவிற்கு காரணமான சங்கதிகளை கண்ணீர் துளிகளுடன்  அவரிடம் கொட்டி வைத்தேன்...

அந்த மலைக்கு அருகிலிருந்த காட்டிற்குள் என்னை அழைத்து சென்றார். மூங்கில் காடு அது... தரையெங்கும் புற்கள்... சரசர சத்தத்துடன் நானும் கடவுளும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தோம்....

கடவுள் பேச துவங்கினார்....

நான் இந்த காட்டில் புல்லையும், மூங்கிலையும் ஒரே நேரத்தில் தான் விதைத்திருந்தேன், சில நாட்கள் கடந்திருந்தன, புல் மெல்ல தலை நீட்ட துவங்கியிருந்தது மூங்கில் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சுவடும் இல்லை, சில மாதங்கள் சென்றன, புல் செழித்து வளர்ந்து தரை முழுக்க பசுமையாக பரவி இருந்தது, மூங்கில் இருந்த இடத்தில் வளர்ச்சிக்கான சிறு தடம் கூட இல்லை...

ஒரு வருடம் கடந்திருக்கும் சிறு முளையாக தரையை முட்டிக்கொண்டிருந்தது மூங்கில். புல்லை விட அது சிறியதாக தான் இருந்தது. அருகில் இருந்த புல்லுடன் அது தன்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை.

இரண்டாம் வருடம் புல்லை விட வலிமையாகவும், உயரமாகவும் வளரத் துவங்கியிருந்தது, மூன்று வருடங்கள் கடந்திருக்கும் உயர...உயர... உயர்ந்து கொண்டிருந்தது மூங்கில்... காட்டின் மிக உயர்ந்த மரமாக அது சில வருடங்களில் வளர்ந்திருந்தது.

புல் முளைக்க ஆரம்பித்திருந்த தருணங்களில் புதைந்திருந்ததாக நம் கண்களுக்கு தெரிந்த அந்த மூங்கில் கீழே தன் வேர்களை பரப்பி கொண்டிருந்தது. எவ்வளவு உயர்ந்து வளர வேண்டுமோ அவ்வளவு கீழே நம் வேர் இருக்க வேண்டும்.புல் வெளியே தலை காட்ட துவங்கியிருந்த பொழுதுகளில் மறைவாக மண்ணிற்குள் புதையுண்டு,தன் வேர்களை கீழே செலுத்தி கொண்டிருந்தது மூங்கில் மேலே உயர்வதற்காக...

நான் கடவுளை இடைமறித்தேன் என் மனதில் இருந்த்தை அவரிடம் கேட்டு விட்டேன்... "என்னை நீ ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? என் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏன் வர வேண்டும்.?"

"சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க கவலைகள் அவசியம்... வெற்றி இனிமை நிறைந்ததாக இருக்க தோல்விகள் அவசியம், உயரமாக வளர... ஆழமாக வேர் செலுத்துதல் அவசியம்...."

"கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வியில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு புது வாழ்வு தந்த அந்த நபர் கடவுளாக தான் காட்சி அளித்தார்"

கண் விழித்து பார்த்தேன் என் எதிரே கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன காடு முழுவதும் மூங்கில் மரங்கள்...

மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க...!

Tuesday, August 6, 2013

இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!

இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்

2) நிறைய பணம்

3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.