Monday, November 11, 2013

பிறரைக் கவர்வது எப்படி?

ஒருவரை நாம் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று எடை போட ஆரம்பித்து விடுகிறோம். இதேபோல மற்றவர்களும் நம்மை எடை போடுவார்களே! அவர்களது மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டாமா? அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன?

இனிமையான குணத்தை விரும்பாதவர் யாருமில்லை. புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் வெளிப் படுத்துங்கள். அளவாகப் பேசுங்கள்; அழகாகப் பேசுங்கள்; இயல்பாகப் பேசுங்கள்; இனிமையாகப் பேசுங்கள்; சிரிக்க சிரிக்கப் பேசுங்கள். தேவைப்படும் போது ஆழமாகப் பேசுங்கள். உங்களது பேச்சும் செயலும் அடுத்தவர் மனதில் அட்டை போல ஒட்டிக் கொள்ளும்.

எப்போதும் எந்த சூழ் நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலித் தனம் வேண்டாம். நீங்கள் செயற்கையாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஆபத்து. ஏனெனில் உங்கள் செயற்கை சாயம் அடுத்தவர்க்கு அப்பட்டமாகத் தெரியும்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய உறுப்பு கண் தான். மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டோ, தரையைப் பார்த்துக் கொண்டோ அடுத்தவரிடம் பேசுவது உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். அடுத்தவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசினால் உங்கள்  தன்னம்பிக்கை பளிச்சிடும்.

பலர் இருக்கும் இடத்தில், சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ.எப்படி எதிர் பார்க்கிறார்களோ அதற்கேற்றபடி உங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினால் தூண்டில் போல மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் கவ்வி இழுக்கப்படும்.

முக மலர்ச்சியும், கலகலப்பும் உங்களை உயர்த்திக் காட்டுகிற உன்னதமான குணங்கள். வருத்தத்தோடு உங்களிடம் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவரும் கவலையை மறந்து கலகலப்பாகி விடுவார்.

இந்த உத்திகளைப் பயன்படுத்தினால் பிறரைக் கவர்வதில் சிறந்த மனிதர் நீங்கள்தான்!