Tuesday, March 31, 2009

நேனோ - ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 1)

2003 ஆம் வருடம் அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. மும்பையிலிருந்த விக்டோரியன் சாண்ட்ஸ்டோன் கட்டிடத்தில் உள்ள பெரிய கான்ஃபரன்ஸ் ரூமில் அந்த ஐந்து பேரும் குழுமியிருந்தனர். உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்த, பலராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக புனேயிலிருந்து வந்திருந்தனர்.

ஒரு நாள் முன்பாகத்தான் அந்த அழைப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அந்த அழைப்பு வந்திருந்தது வேறு யாரிடத்திலிருந்துமல்ல, அந்நிறுவனத்தின் தலைவரிடமிருந்துதான் (யாருடைய வார்த்தைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று உலகால் கருதப்பட்டதோ! அவரிடமிருந்துதான்). அந்த நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாட்டா!!

அந்த சந்திப்பிற்கு சில நாட்கள் முன்புதான் ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் அவர் 1 லட்ச ரூபாயில் கார் உருவாக்குவது பற்றி பேசியிருந்தார். ஆரம்பத்தில், குறைந்த விலையில் கார் என்ற எண்ணம் உருவான போது விலை எதுவும் நிர்ணயமாகியிருக்க வில்லை. ஆனால் ஊடகங்கள் அதனுடைய விலையை 1 லட்சம் என்று நிர்ணயித்து விட்டன.

முடியுமோ, முடியாதோ, அவர்கள் அந்த சவாலை ஏற்றனர். எந்த வார்த்தைகளுக்காக, ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கிலுள்ள விதிகள் மாற்றி எழுதப் பட வேண்டியிருந்ததோ, அந்த வார்த்தைகளுக்காகவே அந்த சவாலை அவர்கள் ஏற்றனர். ஸ்டீலின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் நிலையிலும் அந்த சவாலை அவர்கள் ஏற்றனர்.

இந்த சந்திப்பிற்கு அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு தெரிந்திருந்ததெல்லாம் இந்த சந்திப்பு கண்டிப்பாக டாட்டா தெரிவித்திருந்த குறைந்த விலை காருடன் தொடர்புடையதாக இருக்ககூடும் என்பதுதான்! ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று இருந்தது, அது அவர்களுடைய அடுத்த நான்கு வருடங்கள் பல்வேறு தோல்விகளையும், முடிவில் தலைக்கணம் தரக்கூடிய வெற்றியையும் கொண்டிருக்கப் போகிறது என்பதுதான். இதில் கடினமான விஷயம் என்னவென்றால் இந்த விஷயங்கள் யாவற்றையும் யாரிடமும், ஏன் தங்கள் துணையிடம் கூட பரிமாறிக் கொள்ள முடியாது என்பதுதான்!

அந்த சந்திப்பில், 60 ஸ்லைடுகள் கொண்ட பிரசண்டேசன் மூலம் அவர்கள் விவாதிதது எல்லாம், அப்போது நடைமுறையிலிருந்த அனைத்து வகை குறைந்த விலை போக்குவரத்து முறையைத்தான் (Low cost models of personal transport). இவற்றில் மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ரிகஷா மற்றும் அவர்களுடைய சொந்த படைப்பான இண்டிகா கார் அனைத்துமே அடங்கியிருந்தன.

தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாக அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. தவிர டாட்டாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்பினர். ரத்தன் டாட்டா அவரது கனவை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் உருவாக்க நினைத்ததெல்லாம், உலகின் மிக குறைந்த விலையில் ஒரு கார், எதனுடைய விலை மோட்டார் பைக்கின் விலையை விட சற்றே அதிகமாக இருக்க கூடியதும், எதனுடைய அறிமுகம் ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடியதோ, அத்தகைய காரைத்தான் அவர் உருவாக்க விரும்பினார்.

அத்தோடு நிற்கவில்லை அவர், அந்த காரை உருவாக்கப் போகும் குழுவில் ஒருவராகவும் மாறினார். அவர் கூறிய மற்றொரு வாக்கியம் 'இது போன்ற காரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உருவாக்க முடியும்' என்பதுதான்.

ஊட்டச்சத்து மாத்திரைகளை விட, ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்தான். ஏனெனில் அந்த சந்திப்பு முடிந்த போது, அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு மனிதனால் ஒரு சரித்திரத்தை படைப்பதற்காக தூண்டப்பட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றரை வருடங்களில், அந்த திட்டம் மிகப் பெரிய வளர்ச்சி எதையும் கண்டிருக்க வில்லை. எந்த மாதிரி காரை தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்பதைக் கூட அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் அ) கேன்வாஸ் ஷீட் கொண்ட ஒரு திறந்த வகை கார் அமைப்பைக் கூட அவர்கள் யோசித்து வைத்திருந்தனர். அவர்களுடைய பிரச்சனை என்னவென்றால், காரை அவர்கள் வடிவமைக்கும் போதெல்லாம் அவர்கள் மனதில் மோட்டார் பைக்கின் வடிவமே மேலோங்கியிருந்தது.

இதில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்த ப்ராஜக்ட் ஆரம்பமாகும் போது அவர்களிடம் எந்தவொரு மாதிரித் திட்டமோ (மாடல் பிளானோ), பெஞ்ச்மார்க்கோ கிடையாது என்பதுதான். ஏன், ரத்தன் டாட்டாவின் மனதில் இருந்தது கூட 4 பேர்கொண்ட குடும்பம் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு நினைவலையும், தெளிவில்லாத ஒரு கனவும்தான்.

இத்தகைய பின்புலம் கொண்ட ஒரு திட்டம் எப்படி மெய்பட்டது? என்னென்ன விதமான பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தனர்? 2001ல் ஏறக்குறைய 500 கோடி நட்டத்தை சந்தித்திருந்த ஒரு நிறுவனத்தால் இது எப்படி சாத்தியப்பட்டது? இன்னும் பல ஆக்கப்பூர்வமான தகவல்களோடு மீண்டும் சந்திப்போம் (பாகம்-2ல்)!!!

No comments:

Post a Comment